Wednesday, January 24, 2018

How Lanka

ஆனைக்கோட்டை மூதாட்டி கொலை - நான்கு இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணம்,ஆனைக்கோட்டை பொன்னையா வீதியிலுள்ள வீட்டில் தனியாக இருந்த 72 வயது மூதாட்டி அடித்துக்கொலை செய்யப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களில் ஒருவர் மீது மட்டும் கொலை மற்றும் கொள்ளை குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு முதல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஏனைய மூவரும் திருட்டு நகைகளைக் கொள்வனவு செய்து விற்பனை செய்வது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சந்தேகநபர்கள் நால்வரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நாளை(25) முற்படுத்தப்படுவர் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இந்தக் கொலைச் சம்பவத்தில் ஜெகநாதன் சத்தியபாமா (வயது 72) என்ற மூதாட்டியே தலையில் அடிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.

மூதாட்டி காதில் அணிந்திருந்த தோடு மற்றும் கையில் போட்டிருந்த மோதிரம் ஆகியவை காணாமல் போனமையால் கொள்ளைக் கும்பலே இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்த நிலையில் ஆனைக்கோட்டைச் சேர்ந்த இளைஞர்கள் நால்வர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.