Monday, February 26, 2018

How Lanka

அதிபர் ஆர்.பவானியிடமிருந்து 500 மில்லியன் கோரும் ஊவா முதலமைச்சர்

பதுளை தமிழ் மகளிர் வித்தியாலய அதிபர் ஆர்.பவானியிடமிருந்து ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க 500 மில்லியன் நஷ்டஈடு கோரியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 03ம் திகதி பாடசாலைக்கு மாணவியொருவரை அனுமதிப்பது தொடர்பான பிரச்சினையொன்றின் போது முதலமைச்சர் சாமர சம்பத் தன்னை மண்டியிட வைத்து மன்னிப்புக் கேட்க வைத்ததாக தெரிவித்து அதிபர் பவானி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

எனினும் அதன் பின் அவர் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணல்களில் முன்னுக்குப்பின் முரணாக கருத்து வெளியிட்டதுடன், முதலமைச்சர் தன்னை மண்டியிட்டு மன்னிப்புக் கேட்குமாறு சொல்லவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

முதலமைச்சரின் அவதூறுச் சொற்களை தாங்க முடியாமல் தானாகவே மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டு அவ்விடத்தை விட்டும் விலகிச் சென்றதாகவும் அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் அதிபரை மண்டியிட வைத்து மன்னிப்புக் கேட்க வைத்ததாக தன் மீது சுமத்திய பொய்க்குற்றச்சாட்டு தொடர்பில் அதிபர் பவானி தனக்கு 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு தரவேண்டுமென்று முதலமைச்சர் சாமர சம்பத் தனது சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளார்.

அவ்வாறு நஷ்டஈடு வழங்காவிட்டால் அதிபருக்கு எதிராக மானநஷ்ட வழக்குத் தொடரப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.