Wednesday, February 21, 2018

How Lanka

டுமினி அதிரடி தென்னாபிரிக்கா வெற்றி - டோனியின் அதிரடி வீண்

இந்தியாவுக்கு எதிரான 2-வது டி-20 போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி செஞ்சூரியனில் இன்று நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. இந்தியா சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் களமிறங்கினர். முதல் ஓவரில் ரன் எதுவும் எடுக்கப்படவில்லை.

இரண்டாவது ஓவரை ஜூனியர் டாலா வீசினார். முதல் பந்திலேயே ரோகித் சர்மாவை அவுட்டாக்கி இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தார். அவரை தொடர்ந்து சுரேஷ் ரெய்னா இறங்கினார். தவானும் ரெய்னாவும் இணைந்து அதிரடியாக ஆடினார்.

இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 44 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், ஷிகர் தவான் 14 பந்துகளில் 2 சிக்சர், 3 பவுண்டரியுடன் 24 ஓட்டங்கள் எடுத்து அவுட்டானார்.

அவரை தொடர்ந்து அணித்தலைவர் விராட் கோஹ்லி களமிறங்கினார். அவர் ஒரு ரன் எடுத்திருந்த நிலையில், ஜூனியர் டாலாவிடம் அவுட்டானார். அப்போது இந்தியா 3 விக்கெட்டுக்கு 54 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

அடுத்து களமிறங்கிய மணீஷ் பாண்டே ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடினர். குறிப்பாக, 10-வது ஓவரை வீசிய ஷம்சி ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 19 ஓட்டங்கள் எடுக்கப்பட்டது.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரெய்னா 24 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 30 ஓட்டங்கள் எடுத்து அவுட்டானார். அப்போது இந்தியா 4 விக்கெட்டுக்கு 90 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அவரை தொடர்ந்து டோனி இறங்கினார்.

மணிஷ் பாண்டேவும் டோனியும் பொறுப்புடனும், அதிரடியாகவும் ஆடினர். இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

அதிரடியாக விளையாடிய மணீஷ் பாண்டேவும், டோனியும் அரை சதமடித்து அசத்தினர். இருவரும் சிக்சர்களும் பவுண்டரிகளுமாக அடித்தனர். இருவரும் இணைந்து 47 பந்துகளில் 107 ஓட்டங்கள் குவித்தனர்.

இறுதியில், இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 188 ஓட்டங்கள் எடுத்தது. மணீஷ் பாண்டே 48 பந்துகளில் 3 சிக்சர், 6 பவுண்டரியுடன் 79 ஓட்டங்களுடனும், டோனி 28 பந்துகளில் 3 சிக்சர், 4 பவுண்டரியுடன் 52 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தென் ஆப்ரிக்கா அணி சார்பில் ஜூனியர் டாலா 2 விக்கெட்டும், டுமினி, பெலுகோவோயா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்ரிக்கா அணி களமிறங்கியது.

துவக்க வீரர்களான ஹெண்ட்ரிக்ஸ்(26), ஸ்மட்ஸ்(2) ஆகிய இருவரும் ஏமாற்றமளிக்க டுமினியும் கிளாசெனும் அதிரடி வானவேடிக்கை நடத்தினர்.

30 பந்துகளை சந்தித்த கிளாசென் 69 ஓட்டங்கள் குவித்து அவுட்டானார். தொடர்ந்து மில்லர்(5) வெளியேற டுமினியுடன் பெஹ்ராடென் இணைந்தார்.

அவரும் 10 பந்துகளை எதிர்கொண்டு 16 ஓட்டங்கள் குவித்தார். டுமினி 40 பந்துகளை சந்தித்து 64 ஓட்டங்கள் குவித்தார்.

இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணி சார்பில் தாக்கூர், பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்ற சாஹல் 4 ஓவர்களில் 64 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் ஏதும் எடுக்க தவறினார் என்பது குறிப்பிடத்தக்கது.