Wednesday, February 21, 2018

How Lanka

சுதந்திரக் கட்சியும் - ஐ.தே.கவும் இணைந்து ஆட்சி

ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி அமைக்கத் திட்டமிட்டுள்ளன.

இரண்டு கட்சிகளினாலும் இணைந்து உள்ளுரட்சி மன்றங்களில் ஆட்சி அமைக்கக்கூடிய இடங்களில் இரண்டு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்கும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்…

நாடாளுமன்ற வரலாற்றில் இவ்வாறான ஆட்சிகள் நிறுவப்பட்டுள்ள காரணத்தினால், உள்ளுராட்சி மன்றங்களில் இவ்வாறு ஆட்சி அமைப்பது வழயைமானதேயாகும்.

தற்பொழுது நாட்டில் இரண்டு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைத்துள்ளதனால், உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி நடத்துவதில் பிரச்சினையிருக்காது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத இடங்களில் எதிர்க்கட்சிகள் கூட்டாக இணைந்து ஆட்சியை நிறுவ முடியும் என டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியிடம் காட்டிக் கொடுத்துள்ளார் மைத்திரிபால -  பிரசன்ன ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பத்தாவது தடவையாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை காட்டிக் கொடுத்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

பத்தாம் தடவையாகவும் மைத்திரி, சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியிடம் காட்டிக் கொடுத்துள்ளார்.

பொது வேட்பாளராக போட்டியிட்ட போது முதல் தடவையாக மைத்திரி கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியிடம் காட்டிக் கொடுத்திருந்தார்.

சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொள்ளல், பெரும்பான்மை அதிகாரம் காணப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை கலைத்தல், சுதந்திரக் கட்சிக்கு பெரும்பான்மை பலமிருந்த போது ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தமை, பொதுத் தேர்தலில் மஹிந்தவிற்கு பிரதமர் பதவி வழங்காமை,

சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை இணைத்து அரசாங்கம் அமைத்தல், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலத்தில் சுதந்திரக் கட்சி ஆட்சி அமைக்கும் என மக்களை ஏமாற்றியமை, மீளவும் தேசிய அரசாங்கத்தை முன்னெடுப்பதாக அறிவித்தமை போன்ற காரணிகளில் சுதந்திரக் கட்சியை ஜனாதிபதி காட்டிக் கொடுத்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த அனைத்தும் புலம்பெயர் தமிழர்களதும் சர்வதேச சமூகத்தினதும் தேவைக்கு ஏற்ற வகையில் செயற்பட்டு வருகின்றார்.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். மக்களின் இந்த ஆணையை ஏற்றுக் கொண்டு அரசாங்கம் உடனடியாக பொதுத் தேர்தலை நடத்த வேண்டும்.

இன்னும் ஒரு மாத காலத்தில் கடுமையான தீர்மானம் எடுப்பதாகக் கூறி ஜனாதிபதி அடக்குமுறைகளை பின்பற்றி வருவதாக பிரசன்ன ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.