Tuesday, March 27, 2018

How Lanka

இலங்கையில் ATM மூலம் பணம் எடுப்போருக்கு ஒரு எச்சரிக்கை


இலங்கையில் ATM மூலம் பணம் எடுக்கின்றபோது அது சேதப்பட்டிருக்குமாயின் அதனை குறித்த ATM இயந்திரத்திலுள்ள கண்காணிப்புக் கமெராவில் காட்டுதல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும், சிதைக்கப்பட்ட அல்லது உருமாற்றப்பட்ட நாணயத்தாள்கள் மார்ச் 31 ஆம் திகதியின் பின்னர் ஒருவரிடம் இருக்குமாயின் அதனால் ஏற்படக்கூடிய நட்டத்தை நாணயத்தாள் வைத்திருப்பவரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மத்திய வங்கியின் நாணயத்தாள் பிரிவை சேர்ந்த அதிகாரி தீபா சேனவிரத்ன தகவல் தெரிவித்துளார்.

”நாணயத்தாள்கள் வேண்டுமென்றே சிதைக்கப்பட்டு அல்லது உருமாற்றப்பட்டு இருக்குமாயின்” என்பதன் பொருள், நாணயத்தாள்களில் எழுத்து இலக்கம் கோடு இடுதல் ஆகியவற்றின் மூலம் நாணயத்தாள்களுக்கு வேண்டுமென்றே பாதிப்பை ஏற்படுத்தலாகும் என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர்,

”நாணயத்தாள்களின் தொடர் இலக்க கையெழுத்து வெளியிடப்பட்ட திகதி பாதுகாப்பு அடையாளம் (பாதுகாப்பு இலட்சினை) ஆகிய நாணயத்தாள்களில் இருக்கவேண்டிய இலட்சணங்கள் ஆகும்.

வேண்டுமென்றே சிதைக்கப்பட்ட அல்லது உருமாற்றப்பட்ட நாணயத்தாள்களில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இவ்வாறான நாணயத்தாள்கள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும்.

இருப்பினும், வெள்ளம் தீ போன்ற இயற்கை அனர்த்தங்களினால் அல்லது நாளாந்த பாவனையின் போது பாதிப்புக்குள்ளாகும் நாணயத்தாள்களை மாற்றிக் கொள்வதற்கு நிர்ணய திகதி கிடையாது.

இவ்வாறான நாணயத்தாள்களில் 75% சதவிதமான பாதிப்பு இருக்குமாயின் அவ்வாறான நாணயத்தாள்களின் முழுமையான பெறுமதியாக புதிய நாணயத்தாள்கள் வழங்கப்படும்.

50% சதவிதமான பாதிப்பு இருக்குமாயின் குறிப்பிட்ட நாணயத்தாள்களுக்கு அரைவாசி பங்கு பெறுமதிக்கான நாணயத்தாள்கள் வழங்கப்படும். முழுமையாக பாதிப்புக்குள்ளான நாணயத்தாள்கள் அதன் உரிமையாளருக்கு வழங்கப்படமாட்டாது." என்றார்.

மேலும், எதிர்ரும் 31 ஆம் திகதியின் பின்னர் வேண்டுமென்றே சிதைக்கப்பட்ட அல்லது உருமாற்றப்பட்ட நாணயத்தாள்கள் ஒருவரிடம் இருக்குமாயின் அதனால் ஏற்படக்கூடிய நட்டத்தை நாணயத்தாள் வைத்திருப்பவரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என எச்சரித்தார்.

அத்துடன் ATM இயந்திரத்தின் மூலம் பணம் பெற்றுக்கொள்ளும் போது அதன் பொறுப்பு வங்கிக்கே உரித்தாகும் என்றும், CDM இயந்திரத்தின் மூலம் பணத்தை வைப்பு செய்யும் அந்த நாணயத்தாளுக்கான பொறுப்பு வைப்பிற்கு செய்பவருக்கே உரித்தாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இதுகுறித்து மேலும் தெரிவித்த அவர்,

”பணத்தை பெற்று கொள்ளும் போது இவ்வாறான நாணயத்தாள்கள் கிடைக்கப்பெற்றால் அதாவது பாதிக்கப்பட்ட நாணயத்தாள்கள் ATM இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள CCTV கமராவில் அதன் காட்சிகளை பதிவு செய்ய வேண்டும்.

அவ்வாறான நாணயத்தாள்களை சமர்ப்பித்து அதற்கான நாணயங்களை பெற்றுகொள்ளமுடியும்.


அதன் காரணமாக இலங்கை மத்திய வங்கியின் வர்த்தக நிதி திணைக்களம் பொது மக்களிடம் கேட்டு கொள்வது என்னவென்றால் நாணயத்தாளின் எழுதுதல் சேதப்படுத்தல் போன்ற பழக்கவழக்கங்களில் இருந்து தவிர்த்து கொள்ளவேண்டும்.

நாணயத்தாள்களை பயன்படுத்தும்போது மிகவும் பொறுப்புடன் செயற்படவேண்டும் என்று பொதுமக்களிடம் அத்திணைக்களம் கேட்டுகொண்டுள்ளது.” என்றார்.