Sunday, March 18, 2018

How Lanka

பத்து இலட்சத்தை பறித்து கொண்டும் எனது சகோதரனை கடற்படையினர் கடத்தினர்.

இலங்கை கடற்படையினரால் தனது சகோதரர் கடத்தப்பட்ட நிலையிலும் இதுவரையில் அவர் விடுதலை செய்யப்படவில்லை என ஜெயனி தியாகராசா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அங்கு பிரசன்னமாகியிருக்கும் அவர், ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தொடர்ந்து பேசிய அவர்,

கடந்த 2008ம் ஆண்டு எனது சகோதரன் உட்பட 11பேர் கடத்தப்பட்டனர். இலங்கை கடற்படை அதிகாரி சம்பத் முனசிங்க உட்பட்ட கடற்படை அதிகாரிகளால் எனது சகோதரன் கடத்தப்பட்டார்.

கடத்தப்பட்டவர்களின் ஐவர் மாணவர்களாக இருந்தார்கள். எனது அண்ணா உட்பட்டவர்களின் கடவுச்சீட்டு கடற்படைத் தளபதி சம்பத் முனசிங்கவின் அலுவலகத்தில் இருந்து மீட்கப்பட்டது.

அதன் பின்னர் நிஷந்த டி சில்வா என்ற விசேட குற்றப்பிரிவு அதிகாரி எங்கள் வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் எங்களிடம் சொன்ன முக்கியமான விடையம், உங்கள் சகோதரன் உட்பட்ட ஏனையவர்களின் கடச்சீட்டுகள், மற்றும் தொலைபேசிகள் என்பன கடற்படைத் தளபதியின் அலுவலகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

அவர்கள் காணாமல் போகவில்லை. கடத்தப்பட்டுள்ளார்கள் என்றார். அதற்கான வழக்கு குறித்தும் எங்களிடம் தெளிவுறக் கூறினார். இன்று வரை நாங்கள் வழக்குகளுக்குச் சென்றுவருகின்றோம். வழக்குகளுக்காக தொடர்ந்தும்நாங்கள் சென்று கொண்டிருக்கின்றோம். ஆனால் நீதி இன்னமும் எங்களுக்கு கிடைக்கவில்லை.

பிணையிலும் சிலர் விடுபட்டிருக்கின்றார்கள். இன்று நான் இங்கு வந்தது எமக்கான நீதி என்ன என்பதை கேட்பதற்காகத் தான்.

எனது சகோதரரோடு கடத்தப்பட்ட ஏனையவர்களில் ஒருவர் கூட இன்றுவரை விடுதலை செய்யப்படவில்லை. வறுமையின் காரணமாக கொழும்பில் வேலை செய்ய வந்த போதே எனது சகோதரன் கடத்தப்பட்டார்.

இதுவரை எங்களுக்கு நீதி என்று எதுவும் கிடைக்கவில்லை. வழக்கு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. கடந்த வழக்கில் தஸநாயக்க என்ற இராணுவ ஊடகப் பேச்சாளர் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். எனினும் நாங்கள் இன்றுவரை வழக்குக்கு சென்று கொண்டு தான் இருக்கின்றோம்.

முனசிங்கவை பாதுகாப்பதற்காக அவர்கள் கடும் முயற்சியில் ஈடுபடுகின்றார்கள். அவரின் மனைவியும் ஒரு சட்டத்தரணி. எனவே அவர் ஏனைய சட்டத்தரணிகளைக் கொண்டு வாதாடுகிறார்கள்.

குறிப்பாக முனசிங்க மேல் உள்ள அதிகாரியின் ஆணைக்கு இணங்கியே செயற்பட்டார் என்றும். இவர் மீது தவறு இல்லை என்றும் குறிப்பிடுகின்றார்கள். மேல் அதிகாரி என்று குறிப்பிடுவது ஹெட்டியாராச்சி என்ற அதிகாரி. ஆனால் அவர் தற்பொழுது நாட்டில் இல்லை என்று எமக்கு பதில் தருகின்றார்கள்.

என் சகோதரன் உட்பட்டவர்களைக் கடத்தியதற்கான முழுமுதல் நோக்கம் பணம் தான். 2010ம் ஆண்டு நிஷந்த சில்வா எமது வீட்டிற்கு வருவதற்கு முன்னர், பதிவு செய்யப்படாத இலக்கத்திலிருந்து எங்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதன் போது, பத்து இலட்சம் ரூபா பணம் கொடுத்தால் உங்களது மகனை விடுதலை செய்வதாக சொன்னார்கள்.

மாறாக பொலிஸாரிடமோ, வேறு ஏதாவது வழிமுறைகளில் முயற்சித்தாலோ உங்கள் குடும்பத்தையும், கடத்தப்பட்டவரையும் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டினார்கள். அதேபோன்று அனைத்து சொத்துக்களையும் விற்று, பணத்தை கடனாகவும் வாங்கி சென்றார்.

இந்நிலையில் துப்பாக்கி முனையில் அம்மாவை மிரட்டி பணத்தைப் பறித்துவிட்டு அவர்கள் தப்பித்துச் சென்றார்கள். இது தொடர்பாக நாங்கள் அனைத்து இடங்களிலும் பேசி எந்தப் பலனும்கிட்டவில்லை.

ஐக்கிய நாடுகள் சபையில் யஷ்மின் சூகாவிடம் பேசியிருக்கிறேன். இந்த விடையம் வெளியில் கொண்டுவரப்படவேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். அதேபோன்று ஏனைய மனிதவுரிமைகள் செயற்பாட்டாளர்களுடனும் பேசியிருக்கிறேன்.