Sunday, March 18, 2018

How Lanka

அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய அரசியல் கைதி ஒருவரின் மனைவியின் உயிரிழப்பு


கிளிநொச்சியில் அரசியல் கைதி ஒருவரின் மனைவி உயிரிழந்திருந்தமை நேற்றைய தினம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.

இந்நிலையில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் மனைவி ஆனந்தசுதாகர் யோகராணியின் இறுதி கிரியைகள் நேற்றைய தினம் இடம்பெற்றன.

இதற்காக, சிறையில் இருந்து மூன்று மணிநேர கால அவகாசத்தில் ஆனந்தசுதாகரன் அழைத்துவரப்பட்டார், இதன்போது அவரை அழைத்து வந்த பொலிஸ் உத்தியோகத்தர் துக்கம் தாங்க முடியாமல் கண்ணீர் சிந்தியுள்ளார்.

அரசியல் கைதியான தனது கணவனின் விடுதலைக்காக காத்திருந்த மனைவி, சோகம் தாங்க முடியாமல் மன ரீதியாக பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். மனைவியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக ஆயுள் தண்டனை கைதியான சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரன் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு, மீண்டும் பொலிஸாரால் சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டார்.

தந்தை சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய போது அவரது மகளும் தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறியுள்ளார், அத்துடன், அவரது பாதுகாப்புக்கு வந்த பொலிஸாரும் கண்கலங்கியுள்ளமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான ஆனந்த சுதாகருக்கு மகனும் மகளும் என இரு பிள்ளைகள் உள்ளனர். தந்தை 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட பின்னர் தாயின் அரவணைப்பில் வாழ்ந்த இரண்டு பிள்ளைகளும் தற்போது தந்தையை பிரிந்தும் தாயை இழந்துமுள்ளனர்.