Friday, March 2, 2018

How Lanka

வலம்புரி சங்கை கொள்ளையிட்ட பொலிஸ் அதிகாரிகள் கைது

ஹிக்கடுவை பிரதேசத்தில் வெளிநாட்டவர் ஒருவருக்கு விற்பனை செய்ய தொம்பே பிரதேசத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட சுமார் 20 கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்கொன்றை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹிக்கடுவை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் அதிகாரிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீனிகம பகுதியில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர் ஒருவருக்கு விற்பனை செய்வதற்காக தொம்பே பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் மேலும் மூன்று பேருடன் காரில் ஹிக்கடுவை பிரதேசத்திற்கு வந்துள்ளார்.

வலப்புரி சங்கை கொண்டு வந்தவர்கள் அதனை விற்பனை செய்ய இடை தரகருடன் பேசிக்கொண்டிருந்த போது, அங்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள் வலம்புரி சங்கை பறித்துக்கொண்டு அவர்களை அங்கிருந்து விரட்டியுள்ளனர்.

இதனையடுத்து வலம்புரியை கொண்டு வந்தவர்கள், சம்பவம் தொடர்பாக பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு சென்ற பொலிஸார், வலம்புரி சங்குடன் சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளனர். சந்தேக நபர்கள் நாளைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.