Friday, April 27, 2018

How Lanka

ஆனந்தசுதாகரனை ஜனாதிபதி விடுதலை செய்ய முடியும் - சுமந்திரன்

அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை ஜனாதிபதியே பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய முடியும். அவரை விடுதலை செய்ய முடியாதென்ற மாற்றுக்கருத்திற்கு இடமில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று (26) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, அரசியல் கைதி ஆனந்தசுதாகரனை வெசாக் தினத்திற்கு முன்னர் விடுவிக்க வேண்டுமென பல தரப்பினரும் அழுத்தங்கள் கொடுத்து வரும் நிலையில், புத்தாண்டு தினத்திற்கு விடுவிக்கப்படுவார் என ஜனாதிபதி தெரிவித்திருந்தும் விடுவிக்கப்படவில்லை.

ஆனந்த சுதாகரனை ஜனாதிபதியால் விடுவிக்க முடியாது, நீதிமன்றமே விடுவிக்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்ட நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பினால் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் விடுதலை ஜனாதிபதி சம்பந்தப்பட்ட விடயம். ஆனந்தசுதாகரன் வழக்கின் தீர்ப்பிற்கு பின்னர் தண்டனை அனுபவிக்கும் கைதி. ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் மட்டுமே அவரை விடுதலை செய்ய முடியும்.

கடந்த வாரம் ஜனாதிபதியுடன் நான் தொலைபேசியில் உரையாடிய போது,அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டுமென்பதில் மாற்றம் இல்லை என்பதே தனது நிலைப்பாடும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமன்றி பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் உள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டுமென்பதில் உறுதியாக இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்ததுள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியினால் கூறப்பட்ட காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருந்தாலும் கூட, ஜனாதிபதியினூடாக இவற்றை நிறைவேற்ற வேண்டும்.

அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டுமென்பதில் விதிவிலக்குக் கிடையாது.ஆகையினால், இவர்களின் விடுதலை தொடர்பாகவும் ஜனாதிபதியுடன் பேசியுள்ளேன்.

வெசாக் தினம் முடிந்த பின்னர் தம்முடன் பேசுவதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்துள்ளார் என்றார்.