Tuesday, April 3, 2018

How Lanka

புத்தாண்டு கொள்வனவுகளில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை


எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக தலைநகர் கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கொள்வனவுகளில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் முக்கிய புறநகர்ப் பகுதிகளில் சனநெரிசல் மிக்க சந்தைகளில் பணம், செல்லிடப்பேசிகள், பணப்பைகள் என்பனவற்றை கொள்ளையிடும் கும்பல்களினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

பொருட்களை கொள்வனவு செய்யும் நோக்கில் வரும் நுகர்வோரை இலக்கு வைத்து பெண்கள் மற்றும் இளைஞர்களைக் கொண்ட கொள்ளைக் குழுக்கள் களமிறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புறக்கோட்டை, மஹரகம, நுகேகொடை, ஹோமகம, கிரிபத்கொட, பியகம, கொட்டாவ போன்ற நகரங்களில் இவ்வாறு கொள்ளைக் கூட்டங்கள் களமிறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புத்தளத்திலிருந்து சுமார் 20க்கும் மேற்பட்ட யுவதிகள் கும்பலொன்று கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் களமிறக்கப்பட்டுள்ளது.

பஸ்கள், சந்தைகள் உள்ளிட்ட சனப்புழக்கம் அதிகமான இடங்களில் இந்தப் பெண்கள் அழகாக, கவர்ச்சியாக ஆடையணிந்து பணம் பொருட்களை கொள்ளையிட்டு வருவதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறு சந்கேத்திற்கு இடமானவர்கள் தொடர்பில் ஏதேனும் விடயங்களை அறிவிக்க வேண்டுமாயின் 0112-421111 என்ற இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.