Tuesday, April 24, 2018

How Lanka

போக்குவரத்திற்கு இடையூறாகவுள்ள அனைத்து உள்ளக வீதிகளும் சீரமைக்கப்படும் - வேலணை தவிசாளர்

வேலணைப் பிரதேசத்தில் காணப்படும் சீரமைக்கப்படவேண்டிய உள்ளக வீதிகள் அனைத்தும் செப்பனிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என வேலணை பிரதேசசபை தவிசாளரும் குறித்த பிரதேசத்தின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்  நிர்வாகச் செயலாளருமான  நமசிவாயம் கருணாகரகுரு மூர்த்தி தெரிவித்துள்ளார்.

வேலணை - துறையூர் பகுதி மக்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின் போது குறித்த பகுதி விநாசி வீதியின் புனரமைப்பு தொடர்பாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த வீதியை பார்வையிட்டபின் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் -


கடந்த காலங்களில் எமது கட்சின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது அயராத உழைப்பின் காரணமாகவே இப்பகுதியில் பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதைவிட வேலணை பிரதேச மக்களது நலன் கருதி சிதைந்து காணப்பட்ட அதிகளவான வீதிகள் செப்பனிடப்பட்டும் மணல் மேடாய்க் கிடந்த பல ஒழங்கைகள் காப்பெற் வீதிகளாகவும் அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில் தொடர்ந்தும் இப்பகுதி மக்கள் எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மீது கொண்ட நம்பிக்கை காரணமாகவே இப்பிரதேசத்தின் ஆட்சி அதிகாரத்தை மீண்டும் எம்மிடம் தந்துள்ளீர்கள்.

மக்களின் நம்பிக்கையை நாம் ஒருபோதும் வீணடிக்கப்போவதில்லை. அந்தவகையில் எமது பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து உள்ளக வீதிகளையும் செப்பனிடுவதற்கான முயற்சிகளை நாம் காலக்கிரமத்தில் மேற்கொண்டு மக்கள் போக்குவரத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தருவோம் என்றார்.

இச்செய்தியானது EPDP இன் ஊடகப்பிரிவினரால் எமது செய்திப்பிரிவின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்பட்டவை