Sunday, May 27, 2018

How Lanka

வாட்சன் காட்டடி தர்பார் கோப்பையை கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் 11 வது இறுதிப்போட்டியில் வாட்சனின் அதிரடி ஆட்டத்தால் ஐபிஎல் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றுள்ளது.

ஐபிஎல் டி20 தொடரின் இறுதிப்போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதியது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணியின் அணித்தலைவர் டோனி பந்துவீச்சை தெரிவு செய்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஹர்பஜன் சிங்கிற்கு பதிலாக கரன் சர்மாவும், ஹைதராபாத் அணியில் கலில் அஹமத் மற்றும் சஹா ஆகியோருக்கு பதிலாக கோஸ்வாமி மற்றும் சந்தீப் சர்மாவும் இடம்பிடித்தனர்.


இதனை தொடர்ந்து ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி, ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர்.

முதல் ஓவரை சென்னை அணியின் தீபக் சஹார் வீசினார். 2-வது ஓவரை நிகிடி வீச, அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் கோஸ்வாமி 5 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார், அவரைத்தொடர்ந்து அணித்தலைவர் வில்லியம்சன் களமிறங்கினார்.

9வது ஓவரில் ஐடேஜா வீசிய 3வது பந்தில் தவான் கிளீன் போல்டாகி வெளியேற, ஷகில் அல் ஹசன் களமிறங்கினார்.

10 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 73 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

13வது ஓவரை கரண் சர்மா வீச, முதல் பந்திலேயே வில்லியம்சன் ஸ்டெம்பிங் ஆகி வெளியேறினார், அவரைத்தொடர்ந்து யூசுப் பதான் களமிறங்கினார்.

16-வது ஓவரில் பிராவோ வீசிய ஐந்தாவது பந்தில் ஷகிப் அல் ஹசன், ரெய்னாவிடம் கேட்சாகி வெளியேற, தீபக் ஹூடா களமிறங்கினார்.

கடைசி ஓவரை சர்துல் தாகூர் வீச, கடைசி பந்தில் பிரத்வெய்ட் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

முடிவில் 20 ஓவர்களுக்கு 178 ஓட்டங்கள் எடுத்தது ஹைதராபாத், இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 179 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் வாட்சன் மற்றும் டு பிளசிஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.


11 பந்துகளுக்கு 10 ரன்கள் எடுத்த நிலையில் டு பிளசிஸ் ஆட்டமிழந்தார். பின்னர் ரெய்னா மற்றும் வாட்சன் கூட்டணி அமைத்து விளையாடினார்கள்.

16 பந்துகளை கடந்த பின்னர் வாட்சன் தனது அதிரடியை தொடங்கினார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர், 33 பந்துகளில் அரை சதம் அடித்தார்.



பின்னர் ஒரு ஓவரில் 27 ரன்கள் குவித்து ரசிகர்கள் ஆட்டம் போட வைத்தார். ஒரு புறம் ரெய்னா சராசரி ஆட்டத்தை வெளிப்படுத்த மறுபுறம் வாட்சன் அதிரடி ரன்களை அள்ளிக்குவித்தது.



அதிரடி ஆட்டம் தொடர, 51 பந்துகளில் வாட்சன் சதம் அடித்தார். அரங்கமே அதிர்ந்தது. ராயுடு தொடக்கத்தில் ரன்கள் எடுக்காமல் இருக்க, அவரும் பின்னர் ரன்களை சேர்க்க தொடங்கினார்.

வாட்சனின் அதிரடியால் 179 என்ற இலக்கை சென்னை அணி 18.3 ஓவர்களில் எட்டியதையடுத்து, சென்னை அணி கோப்பையை வென்றது.


இந்த வெற்றியின் மூலம், சென்னை ஐபிஎல் தொடரில் மூன்றாவது முறையாக கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இப்போட்டியில் வென்ற சென்னை அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசும், அதற்கு அடுத்தபடியாக ஹைதராபாத் அணிக்கு 12.05 கோடி ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது.