Thursday, July 5, 2018

How Lanka

விஜயகலா பதவி விலகல் - தமிழர் என்பதால்தான் இந் நிலையா

வடக்கில் மக்களின் துன்பங்களையும் துயரங்களையும் வெளிக்கொண்டுவரும் வகையிலேயே நான் கருத்துத் தெரிவித்திருந்தேன்.

அத்தகைய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமையால் கட்சியின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியும், மக்களுக்காகவும் எனது அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளேன் என முன்னாள் சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கில் குறிப்பாக யாழ்.குடாநாட்டில் வன்முறைகளும் குற்றச்செயல்களும் அதிகரித்துள்ளன.

ஆறு வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்டுள்ளார். 59 வயதான வயோதிபப் பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் வீட்டில் கொள்ளையும் இடம்பெற்றுள்ளது. வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

போதைவஸ்து பாவனையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் மக்களின் துன்பங்களைத் தாங்கமுடியாது புலிகளின் காலத்தை நினைவூட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

ஆறு வயதுச் சிறுமியின் படுகொலை உட்பட வன்முறைகள் குடாநாட்டில் அதிகரித்து வருவதனால் மக்கள் அச்சத்தின் மத்தியில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் நிம்மதியின்றி வாழ்கின்றனர்.

இந்த நிலையில் மக்களின் துன்பங்களை வெளிக்கொண்டு வர வேண்டியது அவர்களது பிரதிநிதியான எனது கடமையாகும். இதனால்தான் மக்களின் துன்பங்களை வெளிக்கொண்டு வரும் வகையில் எனது கருத்தினை தெரிவித்திருந்தேன்.

மக்களின் துன்ப துயரங்களை பறைசாற்றாது மக்களின் பிரதிநிதியாக இருக்க முடியாது. இதனால்தான் வடபகுதி மக்களின் துன்பங்களை எடுத்துக்கூறும் வகையில் உரையாற்றியிருந்தேன்.

இந்தக் கருத்து தென்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமையால் இவ்விடயம் தொடர்பில் கட்சித்தலைமைக்கு விளக்கம் அளித்துள்ளேன்.

கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமரும் கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க அவர்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தபோது என்னுடன் தொடர்புகொண்டு எனது கருத்துக் குறித்து கலந்துரையாடினார்.

இதன்போது எனது நிலைப்பாட்டினை அவருக்கு விளக்கிக் கூறினேன். எனது கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமையால் வேண்டுமானால் அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்வதற்கு நான் தயாராகவுள்ளதாக பிரதமரிடம் நான் எடுத்துக்கூறினேன். ஆனால் அதனை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதன் பின்னர் கொழும்பு திரும்பிய நான் புதன்கிழமை மாலை பிரதமரைச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன் வடக்கில் குறிப்பாக குடாநாட்டில் இடம்பெற்று வரும் போதைப்பொருள் பாவனை, வன்முறைகள், படுகொலைகள் தொடர்பில் எடுத்துக்கூறி மக்களின் துன்பங்களைப் பொறுக்க முடியாமையால் தான் நான் உரையாற்றியதாக விளக்கமளித்தேன்.

தற்போது எனது உரை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமையால் கட்சியின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தற்காலிகமாக அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதற்கு நான் தயார் என்று பிரதமரிடம் எடுத்துக் கூறினேன்.

இதற்கிணங்கவே நான் எனது அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்துள்ளேன். என்னைத் தெரிவுசெய்த மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வர வேண்டியது அவசியமானதாகும்.

மக்கள் துன்பத்திலும் துயரத்திலும் இருக்கின்றபோது நாம் எதனையும் செய்யாது வேடிக்கை பார்க்க முடியாது. இதனால் தான் மக்களின் துன்பங்களில் எடுத்துக்கூற நான் முயன்றேன்.

இதனால் தென்பகுதியில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளதனால் எனது அமைச்சுப் பதவியினை மக்களுக்காக மகிழ்ச்சியுடன் இராஜினாமாச் செய்துள்ளேன்.

எனது மக்களுக்காக குரல் எழுப்பியமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பிலான எத்தகைய விசாரணைகளையும் எதிர்கொள்வதற்கு நான் தயாராக இருக்கின்றேன்.

வடக்கு மக்கள் எம்மை தமது பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவும் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்காகவுமே தெரிவுசெய்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் துன்பப்படும்போது நாம் பேசாதிருக்க முடியாது.

வடக்கில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை மற்றும் வன்முறைகள் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தி மக்கள் அச்சமின்றி அமைதியாக வாழ்வதற்கான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும்.

அவ்வாறான சூழல் ஏற்படுவதற்கு அரசாங்கமானது உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆறு வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்டமை போன்ற சம்பவங்கள் இனிமேலும் தொடரக்கூடாது.

மக்களுக்காக அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளமை தொடர்பில் நான் பெருமை கொள்கின்றேன் என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் என்பதால்தான் இந் நிலைமையா

விடுதலைப் புலிகள் மீண்டும் வரவேண்டும் என இராஜாங்க அமைச்சர் திருமதி விஜய கலா மகேஸ்வரன் கூறியதை தூக்கிப் பிடித்து அவரை ஓர் இனவாதி போல சிங்களப் பேரினவாதிகள் காட்டி நிற்கின்றனர்.

விடுதலைப் புலிகள் மீண்டும் வரவேண்டும் என அமைச்சர் விஜயகலா கூறியதை சிங்களத் தரப்புகள் பெரிதுபடுத்தி பாராளுமன்றத்தில் கூச்சல் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளனர்.

பாராளுமன்றத்தில் கூச்சல் குழப்பங்கள் எழுந்ததும் இந்த நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதிரடியாக அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரனை அமைச்சுப் பதவியில் இருந்து விலகியிருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

ஒரு தமிழன் தேசிய கட்சியில் இருந்தாலும் அவன் கதைத்தால் தங்களுக்கு ஆதரவாகக் கதைக்க வேண்டும். இல்லையேல் கதைக்காமல் இருக்க வேண்டும்.

மாறாக தமிழ் மக்களின் சமகால நிலைப்பாட்டை எடுத்துக் கூறினால் அவர் பதவி துறக்க வேண்டும் என்பதுதான் சிங்களத் தரப்பின் முடிவு என்பது இப்போது வெளிப்படையாகிவிட்டது.

விடுதலைப் புலிகள் மீண்டும் வரவேண்டும் என அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் கூறிய சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பார்ப்பதுதான் ஆட்சியாளர்களுக்கும் கூக்குரல் போடுவோருக்கும் அழகு.

இதைவிடுத்து எடுத்த எடுப்பில் அவரைப் பதவி விலகக் கேட்பது அவர் ஒரு தமிழர் என்பதால் அவரை ஓரங்கட்ட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயன்றி வேறில்லை.

விடுதலைப் புலிகளின் காலத்தில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர். கொலை, கொள்ளை, களவு, பாலியல் துஷ்பிரயோகம் எதுவும் கிடையாது.

அவ்வாறு யாரேனும் தப்பித்தவறி செய்தால் அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட்டது. இதனால் தமிழ் மக்கள் நிம்மதியாக உறங்கினர்.

விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தில் ஒழுக்கம், கட்டுப்பாடு என்பன மிக உச்சமாகப் பேணப்பட்டது என்பதை வெளிநாட்டுப் பிரமுகர்கள் மனப் பூர்வமாக ஏற்றுள்ளனர்.

ஏன்? விடுதலைப் புலிகளால் தடுத்து வைக் கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட படைத் தளபதிகள் மற்றும் கப்பல் தளபதிகள் விடுத லைப் புலிகளின் ஒழுக்கத்தை - கட்டுப்பாட்டை - நிர்வாகத்தை வியந்து பேசியுள்ளனர்.

அப்படியானால் அவர்களுக்கும் அந்நேரம் தண்டனை வழங்கியிருக்க வேண்டும். எனினும் அதை இலங்கை ஆட்சியாளர்கள் செய்யவில்லை எனும்போது அதற்கு அவர்கள் தமிழர்கள் இல்லை என்பதே காரணம் என எடுத்துக் கொள்ளலாமா? என்பது நம் கேள்வி.

தவிர, விடுதலைப் புலிகள் மீண்டும் வரவேண் டும் என்ற அமைச்சர் விஜயகலாவின் உரை விடுதலைப் புலிகள் இராணுவத்துடன் சண்டை பிடிப்பதற்காகவோ அன்றி நாட்டைப் பிரிப்பதற்காகவோ அல்ல.

மாறாக வட்டுக்கோட்டையில் நடந்த கொடூ ரம், சுழிபுரத்தில் நடந்த மிலேச்சத்தனம், நாளாந்தம் நம் மண்ணில் நடக்கும் வாள்வெட்டு, அடாவடித்தனம் இவற்றின் காரணமாகவே மீண் டும் விடுதலைப் புலிகள் வரவேண்டும் என்ற கருத்தை அமைச்சர் விஜயகலா முன்வைத்தார்.

இவ்வாறு அமைச்சர் விஜயகலா கூறிய தைக் கண்டு கூக்குரல் இடுவோர், வடபகுதியில் நடக்கும் பயங்கரங்களை போதைவஸ்து பாவனைகளைக் கண்டித்து கூக்குரல் இடாததும் வடக்கில் உள்ள பொலிஸார் என்ன செய் கிறார்கள் எனக் கேட்காததும் ஏன்?

ஆக, அமைச்சர் விஜயகலா ஒரு தமிழர். அவரையும் அமைச்சுப் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

தமிழனுக்கு எந்தப் பதவியை யும் கொடுக்கக்கூடாது என்ற மனவக்கிரமே எல்லாவற்றுக்கும் மூலகாரணமாகும்.

- Valampuri