Tuesday, September 19, 2017

How Lanka

அமெரிக்காவிற்கு மேலும் சோதனை - வலுவடைந்து வரும் மரியா புயல்

அட்லாண்டிக் கடலில் புதிதாக உருவாகியுள்ள மரியா புயல் வலுவடைந்துள்ளதாகவும், சில மணி நேரங்களில் கரீபியன் தீவுகளை பலமாக தாக்கி பெருத்த சேதத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரீபியன் தீவுகள் மற்றும் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய இர்மா புயலின் பாதிப்பில் இருந்து இன்னும் மீளாத நிலையில், புதிதாக மற்றொரு புயல் உருவாகி உள்ளது.

மரியா என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலும் கரீபியன் தீவுகளை நோக்கி முன்னேறி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி புயல் மிகவும் வலுவடைந்திருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது, சில மணி நேரங்களில் கரீபியன் தீவான டொமினிகாவை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 260 கிலே மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் இந்த புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்தும் என்று வானியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

மிகுந்த ஆபத்து விளைவிக்கும் 4 ஆம் வகை புயலாக மரியா மாறியுள்ள காரணத்தால் போர்ட்டோ ரிகோ மற்றும் விர்ஜின் தீவுகளை நாளை தாக்கலாம் என்றும், அந்த சமயத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இர்மா புயல் நகர்ந்த அதே பாதையில் இந்த புயலும் நகர்கிறது, இதனால், குவாதலூப், மர்த்தினிக், செயின்ட் கிட்ஸ் நெவிஸ், மான்செராட், போர்ட்டோ ரிகோ ஆகிய தீவுகளுக்கும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.