Friday, March 30, 2018

How Lanka

ரணிலை காப்பாற்றுவது தேவையில்லா வேலை - சிறீதரன்

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஒன்றாக இருந்தால் இந்த அரசாங்கத்திற்கு நாங்கள் வழங்குவது எங்களது மக்களின் அரசியல் தீர்வை நோக்கிய பயணத்திற்கு சாதகமாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

எனினும், குறித்த இருவரும் பிரிந்து நிற்க நாங்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக வாக்களிப்பது என்பது எங்களுக்கான ஒரு சாதக தன்மையை தரும் என நம்ப முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் நான்காம் திகதி பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது. இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆரதவு வழங்குமா என ஊடகம் ஒன்று கேள்வியெழுப்பியிருந்தது.

இதற்கு பதிலளித்து பேசிய அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணைந்த வகையில் முன்னெடுக்கப்படும் ஆட்சிக்குத்தான் 2015ஆம் ஆண்டு நாங்கள் ஆதரவு வழங்கியிருந்தோம்.

தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவார்கள் என்ற நம்பிக்கையிலேயே இந்த இரண்டு பெரும் கட்சிகளுக்கு இதுவரை காலமும் ஆதரவு வழங்கியிருந்தோம்.

ஆனால் அவர்கள் இரண்டாக பிரிந்து நின்று, பிரதமர் ரணிலுக்கு எதிராக ஒரு நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருகின்றபோது, அத்தகைய தனி நபர் ஒருவருக்காக, தனி கட்சி சார்ந்த ஒருவரை காப்பாற்றுவதற்காக நாங்கள் அவருக்கு சார்பாக வாக்களிப்பது என்பது ஒரு பொருத்தமான விடயமாக எங்களால் கொள்ளப்படவில்லை.

நிறைவேற்றப்பட வேண்டிய நிறைய விடயங்கள் இவர்கள் இருவருக்கும் இருக்கின்றன. இவ்வாறான நிலையில், தேசியக் கட்சியை சேர்ந்த ஒருவர் ஆட்சியமைப்பதற்கு நாங்கள் எங்களது வாக்குகளை பிரயோகிப்பது என்பது, சாதகமான ஒரு முடிவாக இருக்கும் என கருத முடியாது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஒன்றாக இருந்தால் இந்த அரசாங்கத்திற்கு நாங்கள் வழங்குவது எங்களது மக்களின் அரசியல் தீர்வை நோக்கிய பயணத்திற்கு சாதகமாக இருக்கும்.

எனினும், குறித்த இருவரும் பிரிந்து நிற்க நாங்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக வாக்களிப்பது என்பது எங்களுக்கான ஒரு சாதக தன்மையை தரும் என நம்ப முடியாது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதய சுத்தியுடன், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பார் என்பதற்கு நம்பிக்கைத்தரும் சாத்தியங்கள் எதுவுமில்லை. அந்த வகையில், இந்த அரசைக்காப்பாற்றுவதற்கு நாங்கள் முயற்சிக்கப்போவதில்லை.

எவ்வாறாயினும், இந்த விடயம் குறித்து எதிர்வரும் 2 மற்றும் 3ம் திகதிகளில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி முடிவு எடுப்பதற்கு காத்திருக்கின்றோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்