Friday, March 30, 2018

How Lanka

உறவுகளால் மன உளைச்சல் - சிறைக்கு செல்ல ஆசைப்படும் சசிகலா

கணவர் நடராஜன் இறுதிக்கிரியைக்காக, 15 நாள் பரோலில் வந்த சசிகலா, குடும்பத்தினர் கொடுக்கும் குடைச்சலால், கடும் மன உளைச்சலில் தவித்து வருகிறார்.

'வீட்டை விட சிறையே நிம்மதி' என கருதி, இன்றே பெங்களூரு சிறைக்கு செல்கிறார்.

சசிகலாவின் கணவர் நடராஜன், உடல் நலக் குறைவால், 20ம் தேதி இறந்தார். பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா, 15 நாள் பரோலில் தஞ்சைக்கு வந்தார்.

பரிசுத்தம் நகரில், நடராஜனுக்கு சொந்தமான வீட்டில், 10 நாட்களாக தங்கி இருக்கிறார். 'நடராஜனின் சொத்துக்களை முறையாக பிரித்து தர வேண்டும்' என, அவரது உறவினர்கள், சசிகலாவிடம் கேட்டுள்ளனர்.

சசிகலா உறவினர்கள், அதற்கு முட்டுக்கட்டை போட்டு, தங்களுக்கு தான் சொத்து வேண்டும் என,கேட்டுள்ளனர்.

இதற்கிடையில், தினகரனுக்கும், திவாகரனுக்குமான மோதலை, நடராஜன் இருக்கும் வரை, தீர்த்து வைத்தார். தற்போது, சசிகலாவும் சரி செய்ய போராடி தோற்று விட்டதாக, தகவல் வெளியாகியுள்ளது.

மற்றொரு பக்கம் தினகரன், விவேக் மோதலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இப்படி குடும்ப உறுப்பினர்களால் பாதிக்கப்பட்ட சசிகலா, கடும் மன உளைச்சலில் தவித்து வருகிறார்.

இதனால், வீட்டில் இருப்பதை விட, சிறையில் நிம்மதியாக இருந்ததாக உறவினர் களிடம் புலம்பியுள்ளார். மேலும், தினகரன், சசிகலாவை தன் ஆதரவாளர்கள் கூட நெருங்க விடாமல் கவனமாக பார்த்துக் கொள்கிறார். இதனால், தினகரன் மீதும் சசிகலா கடும் அதிருப்தியில் இருக்கிறார்.

தஞ்சையில் நடராஜனுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில், அவரது பட திறப்பு விழா, நேற்று நடந்தது. இதில் சசிகலா கலந்து கொள்வார் என, ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். மன உளைச்சல் காரணமாகவே, அந்த நிகழ்ச்சிக்கு செல்வதை தவிர்த்து விட்டதாக கூறப்படுகிறது.

சசிகலாவின் பரோல், ஏப்., 3ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், இன்று காலை, 10:30 மணிக்கே அவர் கார் மூலம், பெங்களூரு செல்ல இருப்பதாக, உறவினர்கள் தெரிவித்தனர்.