Thursday, April 12, 2018

How Lanka

டக்ளஸ் தேவானந்தாவின் சித்திரைப் புத்தாண்டுவாழ்த்துச் செய்தி

மலர்ந்திருக்கும் தமிழ் சிங்கள புத்தாண்டு நாளில் தமிழ் மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியும் மனநிறைவும் நிறைந்திருக்கவேண்டும். தமிழ் மக்களும் சிங்கள மக்களும் கொண்டாடி மகிழும் சித்திரைப் புதுவருடத் தினமானது இரு இனங்களுக்குமிடையே நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தவேண்டும் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விடுத்திருக்கும் சித்திரைப் புத்தாண்டுவாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,

படையினரின் வசமிருந்த எமது மக்களின் ஒருபகுதி நிலம், இந்தப்  புத்தாண்டு தினத்தில் விடுவிக்கப்படுவதாக அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது. அதுபோல் எஞ்சியிருக்கும் நிலங்களும் உரியவர்களுக்கு கிடைக்கும்போதே அந்த மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும்.


அதேபோல் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? என்பதை அறிந்துகொள்ளும் கோரிக்கையுடன் வருடக்கணக்காக காத்திருக்கும் எமது உறவுகளுக்கு நியாயமும் பரிகாரமும் கிடைக்கச் செய்யும்போதே அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் மலரும்.

சிறைகளில் தவிக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை எப்போது சாத்தியமாகின்றதோ? அந்நாளில்தான் அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சி நிரந்தரமாகும்.

இவ்வாறு நிரந்தர மகிழ்ச்சிக்காகவும் கௌரவமானதுமான வாழ்வுக்காகவும் காத்திருக்கும் தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் தீர்வைப் பெற்றுக்கொடுப்பது பொறுப்புள்ள தலைமைகளின் கடமையாகும்.

அதை நிறைவேற்றிக் கொடுக்காமல் அரசியல் காழ்ப்புனர்வுகளுடன் அறிக்கைவிட்டுக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. தமிழ் மக்கள் தெருவில் துயரங்களுடன் நியாயம் கேட்டுப் போராடிக்கொண்டிருக்கையில் அந்த மக்களை மறந்தும், மக்கள் வழங்கிய பொறுப்பை உதாசீனம் செய்துகொண்டும் இருப்பவர்களால் எமது மக்களின் கண்ணீரை ஒருபோதும் துடைக்க முடியாது.

எமது மக்களின் வாழ்வில் உண்மையான மகிழ்ச்சி பிறக்கவேண்டுமாக இருந்தால் கௌரவமான வாழ்க்கை சாத்தியப்பட வேண்டுமாக இருந்தால் தாமே தலைமைகள் என்போர் தமிழ் மக்கள் வழங்கியிருக்கும் அரசியல் அதிகாரங்களை மக்களின் நலனுக்காக பிரயோகிக்கவேண்டும். மக்களுக்காக போராடவேண்டும். அல்லது மக்களோடு சேர்ந்து போராடவேண்டும்.

அரசியல் வேறுபாடுகளைக் கடந்து தமிழ்த் தலைமைகள் ஒற்றுமையாக முயற்சி செய்தால்தான் தமிழ் மக்களுக்கு ஒளிமயமான வாழ்க்கையைப் பெற்றுக்கொடுக்கலாம். தேசிய அரசியல் சூழலைப் புரிந்துகொண்டு செயற்திறனோடு நாம் செயற்படவேண்டியதன் அவசியத்தை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். அதேவேளை நீண்டகாலமாக மக்கள் பிரதிநிதிகள் இல்லாது முடங்கிக் கிடந்த உள்ளுராட்சி அதிகாரசபைகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகள் சமூகசேவை எண்ணத்துடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு நோயற்ற சூழலில் எமதுமக்கள் சுகாதாரமானவாழ்வை அபிவிருத்தியுடன் வாழ்வதற்கு அர்ப்பணிப்புடன் உழைக்கவேண்டும் என்றும் அந்தவாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இச்செய்தியானது EPDP இன் ஊடகப்பிரிவினரால் எமது செய்திப்பிரிவின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்பட்டவை