Monday, December 17, 2018

How Lanka

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது - சுமந்திரன்

இலங்கையில் அரசியலில் பெரும் குழப்ப நிலைகள் ஏற்பட்டு, தற்போது அதிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வருவதாக தென்னிலங்கை ஊடகங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

சமகாலத்தில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஈடுபட்டு வருகிறது. அதன் தலைவர் இரா. சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக செயற்பட்டு வருகிறார்.

தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எதிர்க்கட்சியாக மாறியுள்ளது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஐக்கிய தேசிய கட்சியுடன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இணைந்து செயற்பட்டமையினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக பதவி வகிக்க முடிந்தது.

தற்போது ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் மஹிந்த ஆதரவிலான தரப்பினர் இணையப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், 101 ஆசனங்களைக் கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே இரண்டாவது பெரிய கட்சியாக மாறியுள்ளது.

இதன் காரணமாக எதிர்க்கட்சி தலைவர் பதவி மஹிந்த ராஜபக்சவுக்கே வழங்கப்பட வேண்டும் என்று பொதுஜன முன்னணி வலியுறுத்தி வருகின்றது.

இவ்வாறான குழப்பமான நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது. சமகால ஆட்சியிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பே பிரதான எதிர்க்கட்சி என்பதை மறுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த குழப்பமான நிலையில் அடுத்த எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை நாடாளுமன்ற விழுமியங்கள், சம்பிரதாயங்களுக்கு அமைய எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் எந்த முடிவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளத் தயார் என்று, சமகால எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.